Friday, March 1, 2013

செட்டிநாடு வரலாறு மற்றும் பாரம்பரியம் (History & Tradition of Chettinadu)


 

 

செட்டிநாடு வரலாறு

 என் பெயர் அருண்,
  நான் நம்முடைய  செட்டிநாடு  பாரம்பரியம் மற்றும் வரலாற்றை பற்றிய  என் ஆராய்ச்சிகளை  பகிர்ந்து கொள்கிறேன்.
"என் தமிழில் எந்த தவறுகள் இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்"

செட்டிநா
ட்டு (Nattukottai chettiyar) சமூகத்தை சேர்ந்த மக்கள் NAGARATHAR அழைக்கப்படுகின்றன. அவர்கள் வாழும் இடத்தில் செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. நகராத்தார் Nagarathar சமூகம் பெற்ற உறவினர்கள், நலம் மற்றும் சைடர் தான் தங்கள் வீடுகளுக்கு அவர்களின் இயல்பு பிரபலமானது. அவர்கள் பொது பயன்பாட்டு சேவைகள் நினைவு ஈடுபாடு எந்த நடவடிக்கை என்ன மற்றும் கடவுள் வழிபாடு வேலை செய்ய அவர்கள் நன்றாக நடந்து நடத்தை, அர்ப்பணிப்பு, அறியப்படுகின்றன. Nagarathar சமூகம் மற்றும் பண்பாடு பற்றிய முக்கியமான தகவல்களுடன் செய்ய Nagarathar சமூகம் வழங்கிய பங்களிப்பு சில பின்வரும் முறையில் வழங்கப்படுகிறது.


இந்தியாவில், நமது சமூகம் 700 கி.பி.ஆண்டுகள் பழமையான சமூகம் என பிரகடனம் செய்யப்பட்டது, நம் கலாச்சாரம், நமது மனித, நேர்மையும், நேர்மை, செல்வம், உணவு வகைகள், கட்டிட வடிவமைப்பு மற்றும் எங்கள் கருத்துக்களை உலக பாரம்பரிய பிரபலமாக உள்ளது.

எதிர்காலத்தில் நான் நமது பாரம்பரியம் மற்றும் வரலாற்றை பற்றி தகவல் நிறைய பகிர்ந்து கொள்ள போகிறேன்.

எப்போதும் உங்கள் 
அருண் கண்ணன்,
சேலம்.
email: itgearun@gmail.com

செட்டிநாடு (NAGARATHAR) பாரம்பரியம்

திருமணத்திற்கு முதல்நாள்

கூடி ஆக்கி உண்ணுதல்:

திருமணத்திற்கு முதல்நாள் உறவினர்கள் எல்லோரும் கூடி ஆக்கி உண்ணும் நிகழ்ச்சி. நம்மில் பெரும்பாலோர் 'படைப்பு' என்று நம் முன்னோரை வழிபடுகின்ற நாளாக இதனை அமைத்துள்ளனர். அன்றைய தினம் அவரவர் பழக்கப்படி குல தெய்வங்களுக்கு பணம் முடிப்பார்கள்.




திருவிளக்கு ஏற்றுதல்:

அப்பத்தாள் அல்லது அத்தையை அழைத்து நடுவீட்டில் விளக்கு ஏற்றுவது திருவிளக்கு ஏற்றுதல் என்று அழைக்கப்படுகிறது.

கொளுமேளம்:

மேளக்காரர்கள் வந்ததும் சங்கு ஊதி நல்ல காரியத்தை கொளு மேளத்தை வாசிக்கச் செய்யவேண்டும்.

மணை போடுதல்:

பெண் வீட்டில் சுமங்கலிப் பெண்கள் ஊருணியிலிருந்து மணைக்கு மண் அவரவர்கள் ஊர் வழக்கப்படி எடுத்து வருவார்கள். எடுத்து வந்த மண்ணை குழைத்து ஐந்து செங்கற்களின் மேல் வைத்து சங்கு ஊதி அதன் மேல் மணையை எடுத்து வைக்கவேண்டும்.
வெளியூர் திருமணமாக இருந்தால் பெண் வீட்டில் மட்டுமே இச்சடங்கு நகழும். உள்ளூராக இருந்தால் இருவீட்டிலும் நடக்கும். பங்காளி மற்றும் உறவினர் வீட்டுப் பெண்கள் வளவுக்குள் திருமண வீட்டிற்கு எதிரே மணை போடுவார்கள். பெண் வீட்டில் இரட்டை மணையும், மாப்பிள்ளை வீட்டில் ஒற்றை மணையும் வைப்பது மரபு.

மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தல்:

திருமணத்திற்கு இரண்டொரு தினங்களுக்கு முன் மணமகன் கால்களில் இரண்டாவது விரல்களில் வெள்ளியினாலான மோதிரம் ஆசாரியை வரச் சொல்லி அணிவிப்பார்கள்.

தும்பு பிடித்தல்:





முதல் நாள் இரவு படைப்பு முடிந்ததும் இருவீட்டாரும் திருமணம் நிகழ்கின்ற நடு (அறையில்) வீட்டில் அன்று காலை குத்துவிளக்கு ஏற்றி வைத்து அந்த அறையின் வெளிச் சுவற்றிலும், உள்வீட்டுச் சுவற்றிலும், கதவிலும் மங்கலத்தைக் குறிக்கும்படி கோலக் கூட்டினால் ஏட்டுக்கயிறு கொண்டு (படத்தில் காட்டியது போன்ற) வடிவத்தில் வரைவார்கள். இதை கணவன் மனைவியோ அல்லது இரண்டு மங்கலப் பெண்டிரோ செய்வது வழக்கம். இதன் வடிவத்தைப் பார்க்கும்போது இறைவனை அந்த நடுவீட்டைக் கோவிலாக எண்ணி எழுந்தருளச் செய்வது போலத் தோன்றும்.

மாற்றுக்கட்டுதல்:

திருமண மேடைக்கு மேலே நீல நிறம் அல்லது பிற நிறங்களில் (கருப்பு நிறம் தவிர) மாத்துச் சேலை இரண்டை சலவைத் தொழிலாளி (தற்பொழுது பங்காளிகள்) திருமணத்திற்கு முதல் நாள் கட்டிவிடுவார்கள். அக்காலத்தில் பல்லி முதலான பூச்சிகளோ, தூசியோ மணமக்கள் மீது விழுந்துவிடாமல் பாதுகாப்பதற்காகவே இப்படி மாற்றுக் கட்டியிருக்கிறார்கள்.


அரசாணிக்கால் கட்டுதல்:

முன்காலத்தில் மன்னர்கள் நேரில் வந்து அவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதாகவும் ஒரே நேரத்தில் பல திருமணங்கள் நடைபெறும் அளவு மக்கள் தொகை பெருகியதும் அரசன் நேரில் வர இயலாத நிலையில் அரசன் ஆணையை முன்னிறுத்தித் திருமணங்கள் நடைபெற்றிருக்கலாம். அதுவே பின்னர் அரசாணிக்காலாக மாறியிருக்கலாம்.
பெண் வீட்டில் மணைக்கு எதிரில் கோலமிட்ட இடத்தில் பங்காளிகளைக் கொண்டு அரசாணி மேடையை வைத்து அதிலுள்ள பள்ளத்தில் பாலை ஊற்றி பவளத்தைப் போட வேண்டும். அதன் மேல் மூங்கில் கம்பை ஊன்றி அதனைச் சுற்றிலும் கம்பு தெரியாதவாறு கிளுவை, பாலை இரண்டு குச்சிகளையும் இணைத்து அரச இலை, மாவிலை முதலியவற்றால் சுற்றி கீழிருந்து மேலாக கயிறு கொண்டு கட்டவேண்டும்.
இதன் அருகில் உயரம் குறைந்த ஸ்டூலில் சரவிளக்கு வைத்து நல்லெண்ணை தீபமிடவேண்டும். விளக்கை திருமணத்தன்று காலையில் ஏற்றி நிகழ்ச்சிகள் முடியும் வரை எரியவிடவேண்டும்.

முதல்சீர் வைத்தல்:

கல்யாணத்திற்கு முதல்நாள் காலையில் பெண் வீட்டிலிருந்து பெண்கள் மட்டும் மாப்பிள்ளை வீட்டிற்கு, இருவீட்டாரும் பேசிக் கொண்டபடி குடம், செம்பு, விளக்கு ஆகியவற்றுடன் மஞ்சள், உப்பு, புளி, பஞ்சு, விபூதி, பச்சரிசி, பாக்கு ஆகிய சாமான்களுடன் செல்லவேண்டும். இந்நகழ்ச்சி உள்ளூராக இருந்தால் மட்டும் நடைபெறும்.

 

மறுசீர் வைத்தல்:

திருமணத்திற்கு முதல்நாள் மாலையில் பெண் வீட்டிலிருந்து மறுசீர் வைக்க ஆண்களும், பெண்களும் போகவேண்டும். ஆண்கள் தேங்காய் சட்டி, சரிகை வேஷ்டி, துண்டு, சங்கிலி, மோதிரம், கைக்கெடிகாரம், எலுமிச்சம்பழம், பூச்செண்டு, சீர்வைத்த சாமான் நோட்டு, மாமியார் சாமான், பணம் ஆகியவற்றைக் கொண்டு போகவேண்டும். இந்நிகழ்ச்சி இப்பொழுது கல்யாணத்தன்று காலையில் நடைபெறுகிறது.



கழுத்துரு வாங்கச் செல்லுதல்:

வள்ளுவப் பையில் வெற்றிலை பாக்கு, விரலி மஞ்சள், எழுத்தாணி, குலம் வாழும் பிள்ளை, சிவப்புத் துண்டு ஆகியவற்றை வைத்து பங்காளிகள் இருவர் திருமணத்திற்கு முதல் நாள் பெண் வீட்டிற்குச் சென்று கழுத்துஉரு உருப்படிகள் 31-ம் (சில ஊர்களில் 29-ம்), குச்சி, தும்பு, துவாளை உருப்படி ஆக 3ம், பிள்ளைத் தும்பு-1ம் தாலிச் சங்கிலியையும் சிகப்புத் துண்டில் முடிந்து வள்ளுவப் பையில் வைத்து வாங்கிவர வேண்டும்.

திருமணத்தன்று பெண் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள்

 

பூரம் கழித்தல்:

மணமகளின் கன்னித் தன்மையை நீக்கி அவளை இல்லறத்திற்கு உரியவளாக மந்திரப் பூர்வமாக ஆக்குதலே இதன் நோக்கம். திருமணத்தன்று அதிகாலையில் மணமகளை நீராடச் செய்து, ஒரு சரமாலை மட்டும் கழுத்தில் அணிவித்து மணமேடைக்குப் பக்கத்தில் தடுக்கில் நிற்கச் செய்து மணமகளின் அம்மான் மனைவி அல்லது அத்தையோ அல்லது தாயோ பூரம் கழிப்பார்கள்.
மணமகளின் உடலில் ஏழு இடங்களில் அதாவது தலையிலும், தோள்பட்டைகள் இரண்டிலும், இடுப்பில் இரண்டு பக்கங்களிலும், இரண்டு பாதங்களிலும் வேப்பிலையை வைத்து இரும்பு சத்தகத்தினால் அல்லது மரக் குச்சியினால் தட்டி விடுவார்கள். சில வட்டகைகளில் புரோகிதர் விநாயகர் பூஜை, வருண கும்ப பூஜை செய்து பூரம் கழிப்பார்கள். இதன் பிறகு மீண்டும் மணமகள் ஒரு முறை நீராடவேண்டும்.

மாப்பிள்ளை வீட்டிலிருந்து புறப்படுதல்:

மணமகன் தன் வீட்டிலிருந்து புறப்படும்போது, மணமகனுக்கு அப்பத்தாள் மணமகனை நடுப்பத்தியில் கோலத்திற்கு முன் நிறுத்தி அழகு ஆலத்தி எடுப்பார்கள். அழகு ஆலத்தியில் மூன்று ஆலத்திகள் இருக்கும். சதுர வடிவில் 4 திரிகளும், கூம்பு போன்ற இரு ஆலத்திகளிலும் ஒவ்வொரு திரியும் இருக்கும். மணமகனுக்கு முன்பு ஸ்லேட் விளக்கு (அரிக்கேன் விளக்கு) வைத்து ஆலத்தி எடுத்து விபூதி பூசி வழியனுப்பி வைப்பார்கள். அப்பத்தாள் இல்லையென்றால் மணமகனுக்கு அத்தை அல்லது வீட்டிற்குப் பெரிய பெண்டிர்கள் செய்வார்கள்.
உள்ளூர் திருமணமாக இருந்தால் மாப்பிள்ளை திருமணத்தன்று காலையில் பங்காளிகள் உறவினர்களுடன் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து சாமி கும்பிடுதல் மரபு. வெளியூர்த் திருமணமாக இருந்தால் மாப்பிள்ளை அழைப்பு நிகழும் கோவிலிலேயே இந்த அர்ச்சனை வழிபாடுகள் நிகழும்.
மாப்பிள்ளையின் தகப்பனார் அல்லது வீட்டிற்கு பெரியவர்கள் தேங்காய் சட்டியுடனும், திருப்பூட்டுத் தாம்பளத்துடனும், தாயார் சடங்குத் தட்டுடனும், சகோதரி பால் பானையுடனும், சங்கு ஊதி, வள்ளுவப்பையுடன் மாப்பிள்ளையை அழைத்துச் சென்று மாமக்காரர், தாயார், சகோதரியுடன் புறப்பட்டுச் செல்லவேண்டும்.


கழுத்து உருவிற்குப் பொன் கொடுத்தல்:

கழுத்துரு என்பது மணமகள் வீட்டார் செய்யவேண்டிய அணிகலன்களில் ஒன்று. ஆயினும் மணமகன் வீட்டாருடைய தாலிதான் அணிவிக்கப்பட வேண்டும் என்ற பழக்கத்தின் காரணமாக அவர்களுடைய பொன்னும் இந்த பெரிய தாலியில் சேர்ந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு குறிப்பிட்ட நல்ல நாளில் மணமகன் வீட்டார் பங்காளிகளையும், சொந்தக்காரர்களையும் அழைத்துக் கொண்டு, பொன், சந்தனம், குங்குமம், பூ, வெத்திலை, பாக்கு, தேங்காய் முதலியவைகளைக் கொண்டு வருவார்கள். மணமகள் வீட்டில் அவர்களுடைய பங்காளிகள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பொற்கொல்லர் ஒருவர் வந்து அவர்கள் தருகின்ற பொன்னை வாங்கித் தட்டிக் கொடுப்பார். இந்த கழுத்து உரு செய்வதற்கு நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் முன்கூட்டியே தங்கம் சேர்ப்பதற்கு இடம் வைத்து செய்து விடுவதால் திருமணத்தன்று காலை இந்நகழ்ச்சியை நடத்தி மணமகன் வீட்டார் தரும் தங்கத்தை கழுத்திருவில் சேர்த்து விடுகிறார்கள்.

மாப்பிள்ளை அழைப்பு:

திருமணத்தன்று காலையில் மாப்பிள்ளை வீட்டார்கள், ஊர்ப் பொது இடத்தில் (கோவிலில்) வந்து இருப்பார்கள். மணமகள் வீட்டார் ஒரு பெரிய தட்டில் மணமகனுக்கு ஜரிகை வேஷ்டி, துண்டு, மாலை, சங்கிலி, கெடிகாரம், மோதிரம் முதலியவைகளை எடுத்துக் கொண்டு மணமகன் தங்கியிருக்கும் இடத்திற்கு மேளவாத்தியம், சங்கு முதலியன ஒலிக்க மணமகள் வீட்டு உறவினர்கள் ஊர்வலமாக வந்து அவற்றை அணிவித்து அழைத்துச் செல்வார்கள். மணமகனின் தந்தை ஒரு சட்டியில் பாக்கு, மஞ்சள் இரு தேங்காய்களை வைத்து எடுத்துக் கொண்டு வருவார்.

பெண்ணெடுக்கிக் காட்டுதல்:

மாப்பிள்ளை, பெண்வீட்டிற்குள் நுழையும்போது பெண்ணைப் பெண்ணின் அத்தை அழைத்துவந்து மாப்பிள்ளைக்குக் காட்டுதல் இச்சடங்கு ஆகும்.

 

விளக்கு வைப்பது:

மாப்பிள்ளையை அழைத்து பெண் வீட்டிற்குள் கூட்டி வரும்போது நடுப்பத்திக் கோலத்தின் முன் நிற்க வைத்து பெண்ணின் அப்பத்தாள் அல்லது அத்தை வந்து ஆரத்தி எடுத்து விபூதி பூசி, மாப்பிள்ளையை நடுவாசலில் கிழக்கு முகமாக உட்கார வைப்பார்கள்.

பகவத்யானமும் காப்புத் கட்டுதலும்:

திருமண வாழ்வு சிறக்க இறைவனை எண்ணி வழிபடுதலே பகவத்யானம். மணமகனுக்கு முதலிலும் மணமகளுக்குப் பிறகும் தனித்தனியே புரோகிதர் ஒருவர் சங்கல்பம் செய்துவைத்து கணபதி பூஜை செய்வார். பிறகு தாய் மாமன், மணிக்கட்டில் ஒரு சிறு வெள்ளி நாணயத்தை (தற்போது 50 காசு) சிகப்புத் துணியில் முடிந்து நுனி உடையாத விரலி மஞ்சளையும் சேர்த்துக் கட்டிவிடச் செய்வார்.

திருப்பூட்டுதலுக்கு ஆசீர்வாதம் வாங்குதல்:

இருவருக்கும் காப்புக்கட்டி முடிந்ததும் மணமகன் வீட்டிலிருந்து கொண்டுவந்த தாம்பளத்தில் உள்ள திருமாங்கல்யத்திற்கு (கழுத்துரு) இலட்சுமி பூஜை செய்து மணமகளுடைய தாய்மாமனும் அவர்தம் மனைவியும் வீட்டுப் பெரியவர்களிடம் காட்டி வாழ்த்துப் பெற்று நடுவீட்டில் கொண்டுபோய் வைத்துவிடுவார்கள். மணமக்கள் இருவருக்கும் பகவத்யானமும், காப்புக்கட்டுதல் நடைபெறும்பொழுது அவரவர்கள் வீட்டுப் பெரியவர்கள், சுற்றத்தார்கள் அவர்களைப் பூமணம் இட்டு வாழ்த்துவார்கள்.

பூமணம் இடுதல்:

பகவணம் செய்யும்போது மலர்களை பசும்பாலில் நனைத்து மணமக்கள் உடலில் மணிக்கட்டு, முழங்கை, தோள்பட்டை ஆகிய மூன்று இடங்களிலும் தொட்டு வாழ்த்துதலே பூமணமாகும். இதை மூன்று முறை செய்யவேண்டும். முதலில் மாமக்காரர்தான் செய்யவேண்டும். அதேபோல் மாமக்காரர்தான் முடித்து வைக்கவேண்டும். மணவறையிலும் பூமணம் இடவேண்டும்.

அரிமணம் இடுதல்:

முளைப்பாலிகை கிண்ணங்கள் ஐந்திலிருந்தும் முளைவிட்ட தானியங்களைக் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப்போட்டு வாழ்த்துதல் அரிமணமாகும். பகவணத்தின் போது மணமக்கள் இருவருக்கும் அரிமண இடுதல் நடைபெறும். பின்னர் மணவறையின் போதும் தம்பதிகளுக்கு எல்லோரும் அரிமணம் இடுவார்கள்.

திருப்பூட்டுதல்:

மணமகளுக்கு, மணமகனின் வீட்டார் கொண்டுவந்த ஆடைகளை அணிவித்து நன்கு அலங்கரித்து மணமேடை மீது கிழக்கு முகமாக நிற்கச் செய்வார்கள். பின்னர் மணமகனை அழைத்து மணமகளுக்கு எதிரே நிற்கச் செய்வர். மணமகளின் கைகள் இரண்டையும் ஏந்தச் செய்து அதில் பச்சரிசி, தேங்காய் முதலியவற்றைக் கொடுப்பார்கள். தேங்காயின் குடுமிப்பகுதி மணமகனை நோக்கி இருக்கவேண்டும். மணமகன் கோவிலில் இருந்து வந்துள்ள திருநீற்றை, தான் பூசிக் கொண்டு, மணமகள் நெற்றியிலும் பூசவேண்டும். பிறகு கோவில் மாலையை மணமகள் கழுத்தில் அணிவிக்க வேண்டும். பின்பு பெரியவர் ஒருவர் துணையுடன் அவர் எடுத்துத் தருகின்ற கழுத்துருவை வாங்கி மேல்பாகத்தில் திருமாங்கல்யம் உள்ள பகுதி வருமாறு பெண்ணுக்கு அணிவித்துக் கழுத்தின் பின்புறம் மூன்று முடிச்சு போடவேண்டும். முதல் இரண்டு முடிச்சுக்களை மாப்பிள்ளையும் மூன்றாவது முடிச்சை நாத்தனாரும் போடுவது மரபு. பிறகு தாலியை அணிவிக்க வேண்டும். அதன் பின்னர் திருமாங்கல்யத்திலும் மூன்று முடிச்சுகளின் மீதும் சிறுதாலியிலும் மஞ்சள் தொட்டு வைத்து குங்குமம் இடவேண்டும்.
மணமகள் கையில் உள்ள பச்சரிசி, தேங்காய் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்துவிட்டு, மணமக்கள் இருவரும் மூன்று முறை மாலை மாற்றிக் கொள்ளவேண்டும். மணமகன்தான் முதலில் மாலையிட வேண்டும். பிறகு தம்பதிகள் ஒருவருக்கொருவர் இனிப்பை பரிமாறிக் கொள்வது இன்றைய வழக்கம்.
திருப்பூட்டி முடிந்ததும், மணமக்கள் மாமக்காரருடன் வளவு, முகப்பிலுள்ளவர்களிடம் போய் வணங்கி ஆசீர்வாதம் பெறவேண்டும்.
திருப்பூட்டுதலின் போதும், மாலைமாற்றும் போதும் கெட்டிமேளம் வாசிக்கச் சொல்லவேண்டும். பிறகு அனைவருக்கும் ரொட்டி, மிட்டாய், சர்பத் கொடுக்கவேண்டும்.

திருப்பூட்டும் முறைகள்:

நகரத்தார் திருமணங்களில் திருப்பூட்டுதல் மூன்று விதமாக நிடைபெறுகிறது. மேலவட்டகை எனப்பெறும் வலையபட்டி, மேலைச்சிவல்புரி, குழிபிறை ஆகிய பகுதிகளில் மாப்பிள்ளை மணையில் நிற்க, பெண் கீழே நிற்க திருப்பூட்டப்படுகிறது. கீழ்வட்டகை எனப்பெறும் காரைக்குடி, தேவகோட்டை, பள்ளத்தூர் ஆகிய பகுதிகளில் பெண் மணைமீது நிற்க, மாப்பிள்ளை கீழே நிற்க திருப்பூட்டப்படுகிறது. தெற்கு வட்டகை எனப் பெறும் நாட்டரசன் கோட்டை, ஒக்கூர், அலவாக்கோட்டை ஆகிய பகுதிகளில் அறைக்குள் மாப்பிள்ளையும் பெண்ணும் சரிசமமாக நின்று திருப்பூட்டுதல் நடைபெறுகிறது.

இசைவு பிடிமானம் எழுதுதல்:

இசைவு பிடிமான புத்தகங்கள் அச்சிடப்பட்டு கிடைக்கின்றன. அதில் தனித் தனியே இருதரப்பாரும் அவரவர்கள் கோவில் பிரிவுகள் விவரத்தினைப் பங்காளியைக் கொண்டு எழுதி மணமக்களின் தந்தைமார்கள் இருவரும் நடுவீட்டில் அமர்ந்து கையெழுத்துச் செய்து, மாப்பிள்ளை வீட்டார் எழுதியது பெண் வீட்டிலும் பெண் வீட்டார் எழுதியது மாப்பிள்ளை வீட்டிலும் இருக்கும்படியாக மாற்றிப் பெற்றுக் கொண்டு, வைத்துக் கொள்ள வேண்டியது. இதில் எழுதிய பங்காளிகளும் கையொப்பம் இடவேண்டும்.

திருப்பூட்டுச் சடங்கு:

மணமகனின் தாயார் அல்லது சகோதரி அல்லது இருவரும் செய்கின்ற சடங்கு இது.
ஒரு சடங்குத் தட்டில் ஏழு கிண்ணங்கள் இருக்கும். அவற்றில் பிள்ளையார், வெத்திலைபாக்கு ஒன்றிலும், மற்றவை ஒவ்வொன்றிலும் மஞ்சள், விபூதி, பச்சரிசி, உப்பு, புளி, பஞ்சு முதலியனவும் வைத்திருப்பார்கள். ஒரு படியில் நிறைய நெல் வைத்து அதன்மேல் கத்தரிக்காய் ஒன்று வைத்திருப் பார்கள் (இதனை 'நிறை நாழி' என்பர்) ஒரு கெண்டிச் செம்பில் (மூக்கு வைத்த செம்பு) தண்ணீர் வைத்திருப்பார்கள். இவைகளை மணையின் மீது கிழக்கு முகமாக நிற்க வைத்து, கீழே தடுக்கு போட்டு அதில் சடங்கு செய்கிறவர்கள் நின்று கொள்வார்கள். முதலில் சடங்கு தட்டில் உள்ள விபூதியை வலது கரத்தால் எடுத்து சடங்கு செய்கிறவர்கள் தான் பூசிக் கொண்டு, பிறகு பெண்ணுக்கும் பூச வேண்டும். இந்த ஏழுகிண்ணங்கள் ஒவ்வொன்றையும் மூன்று மூன்று முறை தொட்டு விபூதியைத் தானும் கழுத்தில் பூசிக் கொண்டு பெண்ணுக்கும் கழுத்தில் பூசவேண்டும். இவ்வாறு இருபத்தியொரு முறை பூசியதும் வலது கரத்தில் கெண்டிச் செம்பை எடுத்துக் கொண்டு மணமகள் கையில் ஒரு வெற்றிலையைக் கொடுத்து முதலில் நிறை நாழியை சடங்கு செய்பவர் இடது கையால் பிடித்துக் கொண்டு வலது கையினால் கெண்டிச் செம்புத் தண்ணீரை மணமகள் கையில் உள்ள வெற்றிலையில் ஊற்றுவார். மணமகள் அந்த நீரைப் பாதங்களில் வடித்துவிட்டு இரு கைகளினாலும் வெற்றிலையை நெற்றியில் வைத்து வணங்குவாள். இச்சடங்கு மூன்று முறை நிகழும். இது போலச் சிலேட்டு விளக்கு, பிள்ளைக் குழவி முதலியவற்றை வைத்துக் கொண்டு சடங்கு செய்வர். சடங்குகள் முடிந்ததும் சிலேட்டு விளக்கை நேராக வீட்டுக்குள் வைக்கவேண்டும். மற்ற பொருள்களை மணமகளின் பின்புறமாகச் சுற்றி இடவலமாகக் கொடுத்து வீட்டுக்குள் வைக்கவேண்டும்.

 

மணவறைச் சடங்கு:

புரோகிதர் இச்சடங்கை நடத்தி வைப்பார். விநாயகர் பூசை, வர்ணகும்ப பூசை, அக்கினி வளர்த்து நவக்கிரக ஓமம், ஆயுள் ஓமம், தீவலம் வருதல், அரிமணம் இடுதல், பூமணம் இடுதல் ஆகியவை நிகழும். இத்தகைய நிகழ்ச்சிகள் எல்லாம் மாமக்காரர்கள் முதலில் செய்த பிறகே மற்றவர்கள் செய்ய வேண்டும். பிறகு மணமகளின் உடன் பிறந்தவரில் ஒருவர் மணமகனுக்கும், மணமகனின் உடன் பிறந்தவர்களில் ஒருவர் மணமகளுக்கும் திரட்டுப்பால் தடவுவார்கள்.வாழ்க்கை வளமுடன் இனிமை பொருந்தியதாக அமையட்டும் என்பதற்கு அறிகுறியாக திரட்டுப்பாலுக்குப் பதிலாக வாழைப்பழத்தை தின்பதற்குக் கொடுக்கின்ற நிகழ்ச்சிதான் இது. காலப்போக்கில் வாழைப்பழத்தை மணமக்களின் வாயில் தடவி, வேடிக்கையாகச் சிரித்து மகிழ்கின்ற நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது.
பிறகு மாப்பிள்ளை தலையில் எண்ணெய் சீயக்காய், தண்ணீர் முதலிய வற்றைப் பெண்ணும், பெண்ணின் தலையில் மாப்பிள்ளையும் மாவிலையால் தொட்டு வைப்பார்கள்.
அதன் பிறகு மாப்பிள்ளையின் எதிரில், ஒரு முக்காலி வைத்து அதன் மீது ஒரு சட்டியை வைத்து அதில் சோறு, பருப்பு, நெய், வாழைப்பழம் முதலிய வற்றைப் பரிமாறிய பின் மாப்பிள்ளை அதைச் சுவைத்துப் பார்க்க வேண்டும். பிறகு மாப்பிள்ளை கை அலம்புவதற்கு பெண் நீர் ஊற்ற வேண்டும்.
பிறகு மாமக்காரர்கள் இருவரும் மணமக்கள் தலைகளில் கொண்டை மாலைகளை மூன்று முறை மாற்றி மாற்றி வைப்பார்கள். பின்னர் பெண்ணின் தந்தை தலைச் சீலையில் பணம் முடிதல் வேண்டும்.
மணமக்கள் முன் இருக்கின்ற முக்காலி மீது உள்ள சட்டியில் அரிசி, மஞ்சள், தேங்காய் இவைகளை வைத்து ஒரு பட்டுத்துணியால் (மாமப்பட்டு) இரு மாமக்காரர்களும் மூடினாற்போலப் பிடித்திருக்க, மணமக்கள் இருவரும் அதை எடுத்து மூன்று முறை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பட்டுத் துண்டு போர்த்திய நிலையிலேயே மணமக்கள் இருவரும் எழுந்து அரசாணைக்காலையும் அக்னியையும் சுற்றி வலம் வந்து, நடு வீட்டில் சென்று அமர வேண்டும். மாமக்காரர் அந்தப் பட்டுத் துணியை விலக்கிய பிறகு அந்தப் பொருள்களை அங்கு வைத்துவிட்டு எழுந்து வெளியே வரவேண்டும்.

தலைச்சீலையில் முடிதல்:

மணமகளின் தந்தை தன் மகளை மணமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது வழிச் செலவுகளுக்கு கொடுக்கின்ற முதல் பணப் பரிசுதான் 'தலைச்சீலையில் முடிதல்' என்பதாகும். மணமகளின் தந்தை ஒரு சிறு தொகையை மணமகனின் தலையில் வைப்பார். அதனை எடுத்து மாமக்காரர் மணமகன் தந்தையிடம் கொடுத்துவிடுவார். பின்னர் இந்தத் தொகை மணமகளுக்கு கொடுக்கின்ற ஸ்ரீதனப் பணத்துடன் சேர்த்துக் கொள்ளப்படும்.


 

வேவு எடுத்தல்:

தலைப்பிள்ளைக்கு மட்டும் முதலில் மாம வேவு எடுத்தல் வேண்டும். அதற்கு பெண் வீட்டார் தயாரித்துள்ள பச்சரிசி, இலைக்கட்டு, பரங்கிக்காய், வாழைப்பழம், கற்கண்டு, மஞ்சள், பழங்கள் முதலியவற்றைப் பணியாட்கள் தலைமேல் வைத்து பெண்ணுக்கு ஆயாள் வீட்டுப் பங்காளிகள் எல்லோரும் மேள தாளத்துடன் கொண்டு வருவார்கள். பெண் வீட்டு முகப்புப் பத்தியில் கோலத்திற்கு முன்பாக அவர்களை நிற்கச் செய்து, பெண்ணின் அப்பத்தாள் குத்து விளக்கு வைத்து பின் தாய் மாமன் வீட்டு ஆண்கள் தலையில் புழுங்கலரிசி படி 2, தேங்காய் 2, கத்திரிக்காய் 2 கொண்ட வேவுக்கடகத்தைத் தலையில் வைத்துக் கொள்ள, முதலில் பெண்ணும், பிறகு அவள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் ஒவ்வொருவராக வந்து 5, 7, 9 என்ற ஒற்றைப் படை எண்ணிக்கையில் இறக்கி நடு வீட்டில் கொண்டு போய் வைத்து விடவேண்டும்.
மாப்பிள்ளை தலைப் பிள்ளையாக இருந்தால் மாப்பிள்ளையின் ஆயாள் வீட்டாரும் இந்த வேவு எடுத்தல் வேண்டும். ஆயாள் வீட்டு ஆண்கள் தலையிலிருந்து மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் இறக்கவேண்டும்.
பிறகு பெண் வீட்டார் 'கல்யாண வேவு' எடுத்தல் வேண்டும். கல்யாண வேவின் போது பெண் வீட்டு ஆண்களான பெண்ணின் தந்தை, பெண்ணின் பெரியப்பா, சித்தப்பா, பெண்ணின் அண்ணன், தம்பிகள், பெண்ணின் அண்ணன் தம்பி மகன்கள், பெண்ணின் அய்யாக்கள், வீட்டுப் பங்காளிகள், கூடிக்கிற பங்காளிகள், பெரும் பங்காளிகள் ஆகியோர் தலையில் வேவு கடகத்தை வைத்துக் கொள்ள மாப்பிள்ளை வீட்டுப் பெண்களான கல்யாணப் பெண், மாப்பிள்ளையின் தாயார், மாப்பிள்ளையின் ஆச்சி, தங்கைமார், மாப்பிள்ளையின் ஆச்சி தங்கச்சி மக்கள், மாப்பிள்ளையின் பெரியப்பச்சி, சித்தப்பார் மகள்கள் இறக்கி இருவருமாக நடு வீட்டிற்குள் கொண்டு போய் வைத்தல் வேண்டும்.

பணம் எழுதுதல்:

திருப்பூட்டி முடிந்ததும், நேரத்தை அனுசரித்து மாப்பிள்ளை வீட்டுப் பங்காளிகளும், பெண் வீட்டுப் பங்காளிகளும் தனித் தனியாக இருந்து பணம் எழுத வேண்டியது. ஒரு முக்காலியில் சருவச் சட்டி வைத்துப் பச்சைப் பாலை ஊற்றி, வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு அதில் ஒரு ரூபாய் நாணயத்தையும் போட்ட பின் பணம் எழுதவேண்டும்.
முதலில் அந்த வகை ஆட்கள், அப்புறம் பங்காளிகள், பிறகு உறவினர்களாகவும் பங்காளிகளாகவும் உள்ளவர்கள், பின்பு மாமக்காரர்களையும் எழுதிப் பின்பு சடங்குகாரர்கள் சம்பந்தப்புரங்களையும், உறவினர், நண்பர்களையும் எழுதி ஒன்றாகப் பணத்தைச் சிகப்புத் துணியில் முடிந்து, மாப்பிள்ளை வீட்டார் எழுதிய பணத்தை, மொய்ப் பண ஏட்டுடன் வெற்றிலை பாக்கு, மலர், எலுமிச்சம் பழம் உள்ள தாம்பாளத்தில் வைத்து, மாப்பிள்ளை, பெரியவர்கள், மாமக்காரர்கள் ஆகியோரிடம் கொடுத்து வணங்கி வாங்கிப் பின்னர், இளையவன் ஒருவன் மாப்பிள்ளையை வணங்க, இருவரும் சேர்ந்து அந்த மொய்ப்பண முடிச்சு உள்ள தாம்பாளத்தை நடு வீட்டிற்குள் வைத்துப் பிறகு எடுத்துக் கொண்டு வந்து கணக்கில் வரவு வைத்துக் கொள்ள வேண்டும்.
இதே போல் பெண் வீட்டார்கள் எழுதிய மொய்ப்பண ஏட்டையும் தாம்பாளத்தில் வைத்துப் பெண்ணின் தகப்பனார் அல்லது பெண்ணின் அண்ணன், தம்பி, மாமக்காரர்களிடம் கொடுத்து, வாங்கி தாம்பாளத்தை நடு வீட்டிற்குள் வைத்துப் பிறகு எடுத்து வந்து, கணக்கில் வரவு வைத்துக் கொள்ள வேண்டும்.

கும்பிட்டுக் கட்டிக் கொள்ளுதல்:

மணவறை முடிந்து நெற்கோட்டை தாண்டி வீட்டிற்குள் சென்று வந்ததும், நடுவாசலில் மணமக்கள் வந்து, ஆளுக்கொரு நாற்காலியில் அமரவேண்டும். மாப்பிள்ளை, பெண் இரு வீட்டுப் பெற்றவர்களும், பெரியோர்களும் ஒவ்வொருவராக அவர்கள் முன்வந்து நின்றவுடன் மாப்பிள்ளை, பெண் இருவரும் கீழே விழுந்து வணங்கி வாழ்த்துப் பெறுதலே இந்நிகழ்ச்சி.

சீராட்டுக் கொடுத்தல்:

மணமகளுக்கு அவர் தகப்பனாரும் அவருடைய சகோதரர்களும் தருகின்ற பணம்தான் சீராட்டு. மணமகனை மணையில் உட்காரச் செய்து வள்ளுவப்பையில் (பாக்கு, மஞ்சள், எழுத்தாணி முதலியன வள்ளுவப் பையில் இருக்கும்) ஒவ்வொரு பெயராக படிக்க, மணமகளின் தந்தை ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு பிடிபாக்கு போடுவார்கள். இப்படி பிடிபாக்கு வள்ளுவப்பையில் போட்டதும் அதை கட்டி முடிந்து, தாம்பாளத்தில் வைத்துப் பெரியவர்களிடம் கொடுத்து, மணமகன் திரும்ப பெற்றுக் கொள்வார். கடைசியாக மணமகனை விட இளையவர் ஒருவர் மணமகனை வணங்க இருவரும் அதை கொண்டுபோய் நடுவீட்டில் வைத்துவிட்டு வருவார்கள். கடைசியாக கணக்குப் பார்த்து சீராட்டுப்பணம் ஸ்ரீதனத்துடன் சேர்த்துக்கொள்ளப்படும்.


மஞ்சள் நீராடுதல்:

மணமக்கள் இருவரும் நல்ல உடைகளைக் களைந்து விட்டு வேறு சாதாரண உடைகள் அணிந்து கொண்டு நடு வாசலில் ஒரு பெஞ்சின் மீது அமர வேண்டும். உள்ளூர் கோயில் வயிராவி மாப்பிள்ளைக்கு எண்ணை தொட்டு வைப்பார். பிறகு வயிராவி, கரைத்து வைத்திருக்கும் மஞ்சள் நீரை மாப்பிள்ளை, பெண்ணின் பாதங்களில் ஊற்றுவார். அப்போது மணமக்கள் தந்தையார் இருவரும் தங்களது ஆடை நுனிகளை மஞ்சள் நீரில் நனைத்துக் கொள்ளல் வேண்டும். இதுபோல் தாயார் இருவரும் மஞ்சள் நீரில் சேலை நுனிகளை நனைத்துக் கொள்ளல் வேண்டும். பிறகு மணமக்கள் நாணாளைக்குரிய புதிய ஆடைகளை அணிந்து கொள்ளவேண்டும். அதன் பிறகு மணமகள் வீட்டுப் பெரியவர்கள் நீராலாத்தி எடுப்பார்கள்.

நீராலாத்தி:

ஒரு சிறிய தாம்பாளத்தில் கொஞ்சம் தண்ணீர்விட்டு அதில் மஞ்சள் தூளையும், சுண்ணாம்பையும் கலந்து வெத்திலையை கிள்ளிப்போட்டிருப்பார்கள். இது செந்தூர் நிறத்தில் இருக்கும். இதுவே நீராலாத்தியாகும்.

காப்புக் கழற்றிக் கால் மோதிரம் அணிதல் (நாணாளைச் சடங்கு):

பெண்ணை மணை மேல் நிற்க வைத்து மாப்பிள்ளையின் தாயார் பெண்ணுக்குத் தன் கையில் அணிந்துள்ள காப்பைக் கழற்றி அணிவித்து, பெண்ணின் (இரண்டாவது) கால் விரல்களின் மிஞ்சி (கால் மோதிரம்) அணிவிக்கவேண்டும். பிறகு திருப்பூட்டிய பிறகு செய்து கொள்ளும் சடங்கைப் போல் மாப்பிள்ளையின் தாயார் சடங்கு செய்து கொள்ள வேண்டும்.

 

 காப்பு அவிழ்த்தல்:

மாப்பிள்ளை பெண் இருவருக்கும் அவரவர் மாமக்காரர்கள், இருவர் கையிலுள்ள ஐயரால் முடியப்பட்ட காப்பு இரண்டையும், தனித் தனியாக அந்தந்த மாமக்காரர் அவிழ்த்து ஒரு தாம்பாளத்தில் வைத்து விடவேண்டும்.

பிள்ளை எடுக்கிக் கொடுத்தல்:

சடங்குக் குழவியை சிகப்புத் துணியில் வைத்து அதைக் குழந்தையாகவே கருதி பெண்ணின் தந்தை எடுக்கிக் கொடுக்க, பெண் நமஸ்காரம் செய்து வாங்கிக் கொள்வதுதான் இச்சடங்கு. இதுபோல் பெண் வீட்டு ஆண்களில் முக்கியமானவர்கள் எல்லோரும் பிள்ளை எடுக்கிக் கொடுத்து ஆசீர்வாதம் செய்யவேண்டும்.

அரசாணிக்குப் பொங்கல் இடுதல்:

பெண்ணின் அம்மான் மனைவி அரசாணிக்காலுக்கு முன் பொங்கல் இட்டு இறக்கவேண்டியது. பிறகு அதை வண்ணாத்தியிடம் கொடுக்க வேண்டும்.

பெண் சொல்லிக் கொள்வது:

பெண் தாய் வீட்டிலிருந்து கணவன் வீட்டுக்குச் செல்ல இருப்பதால் தன் தாயிடமும் தாயதிகளிடமும் சொல்லிக் கொள்ள வேண்டும். பெண் நடு வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பத்தியில் விரித்திருக்கும் பாய் ஒன்றில் கிழக்கு முகமாக கையில் வெற்றிலை பாக்குத் தாம்பாளத்துடன் நிற்க வேண்டும். பெண்ணின் பெற்றோர், உறவினர், பங்காளிகள் ஒவ்வொருவராக அந்தப் பாயின் மீது எதிரில் நிற்க, அவர்களிடம் வெற்றிலை பாக்குத் தாம்பாளத்தைக் கொடுத்து, அவர்கள் காலில் விழுந்து வணங்கி, சென்று வருகிறேன் என்று சொல்லி வாங்கிக் கொள்ள வேண்டும்.

 

குடி அழைப்பு:

பெண் சொல்லிக் கொண்டதும் மணமக்கள் இருவரும் நடு வீட்டில் உட்கார்ந்து இருந்து எழுந்து வந்து முகப்பு நடுப் பத்தியில் கோலத்திற்கு முன் வந்து நிற்பார்கள். பெண்ணுக்கு ஆயாள் வந்து சிலேட் விளக்கு வைத்து, அழகு ஆரத்தி எடுத்து, விபூதி பூசி கட்டுச் சோறுடன் வழியனுப்பி வைப்பார்கள். மாப்பிள்ளைக்கு வலது பக்கம் நிற்கும்படியாக பெண் அழைத்துச் செல்ல வேண்டியது. இது சமயம் பெண்ணின் தாயார் பால் பானையை கையில் கொண்டு வரவேண்டும்.
மாப்பிள்ளையின் ஊருக்குச் செல்லும் வழியில் ஒரு ஊரணிக் கரையில் இறங்கி, கட்டுச் சோறு சாப்பிட்டு விட்டு மாப்பிள்ளை வீட்டுப் பங்காளி ஒருவரது வீட்டில் தங்கி இருக்கவேண்டும். தற்பொழுது மாப்பிள்ளையின் ஊரில் கோவிலிலோ அல்லது பொது இடத்திலோ இருக்கிறார்கள்.

அரசாணிக்கால் அவிழ்த்தல்:

பெண்ணின் அம்மான் மனைவி அரசாணிக் காலுக்கு முன் பொங்கல் இட்டு இறக்கியதும், பெண் வீட்டுப் பங்காளிகள் அல்லது பெண்ணின் சகோதரர்களே சர விளக்கை மலை ஏற்றிவிட்டு சரவிளக்கை எடுத்து வைத்துவிட்டு அரசாணிக் காலில் உள்ள அரச இலை, மா இலை, கிளுவைக் கம்பு உள்பட யாவற்றையும் அவிழ்த்து விடவேண்டியது. பின் பங்காளி வீட்டுப் பையன்களில் ஒருவரை அழைத்து முளைப்பாரியை சர்வச் சட்டியில் வைத்து சிகப்புத் தோம்புத் துணி கொண்டு மூடி, ஊரணியில் அல்லது கிணற்றில் சங்கு ஊதிக் கொண்டுபோய் விட்டுவரவேண்டியது. கிளுவை பாலைக் கம்புகளை வீட்டுத் தோட்டத்தில் ஊன்றி வைக்கவேண்டியது.

 

திருமணத்தன்று மாப்பிள்ளை வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள்

மாப்பிள்ளை வீட்டில் பெண்ணழைப்பு:

பெண் வீட்டிலிருந்து திருமணம் முடிந்து விடைபெற்று வந்த மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள், மாப்பிள்ளை வீட்டு வளவு வாசலில் கோலமிட்டு பெண்ணழைத்த பொங்கல் இட்டு, அடுப்பை அகற்றிவிடலாம். பெண்ணை அழைத்து வரும் சமயம் மூன்று இலையில் சாதம் படைத்து, ஒரு இலைக்கு 4 வாழைப்பழம், பருப்பு, நெய் ஊற்றிப் படையல் செய்து படைத்த இலைகளுக்கு முன் மூன்று தவலைகளில் தண்ணீர் வைத்து ஒன்றில் குலம் வாழும் பிள்ளையும், மற்றொன்றில் எழுத்தாணியையும் போட வேண்டும். பெண் மாப்பிள்ளை இருவரும் திருமணம் முடிந்துவந்து தங்கி இருக்கும் இடத்திலிருந்து, எல்லோரும் மேள வாத்தியங்களுடன் மணமக்களை ஊர்வலமாக மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து வரவேண்டும். வீட்டிற்குள் நுழையும் பொழுது முதலில் வலது காலை எடுத்து வைத்து நுழையும்படி முன்னதாகவே சொல்லி வைத்து அதன்படி மணமக்கள் செய்தல்வேண்டும்.
பெண்ணும், மாப்பிள்ளையும் வீட்டிற்கு வந்ததும் முகப்பு நடுப்பத்தியில் கோலத்துக்கு முன்பாக நிறுத்தி, மாப்பிள்ளையின் அப்பத்தாள் அழகு ஆரத்தியும், பிள்ளையார் ஆரத்தியும் எடுத்து, விபூதி பூசி உள்ளே வந்ததும் படைத்த இலைக்கு முன்பாக கிழக்கு முகமாக நிற்கும்படி இரு தடுக்கைப் போட்டு ஒன்றில் சடங்கு செய்து கொள்பவர்களும், மற்றொன்றில் பெண்ணும் நிற்க வேண்டும். இவர்களுக்கு அருகில் மாப்பிள்ளை நிற்கவேண்டும்.
குறிப்பாக பெண் ஆனவள், பெண்ணழைத்துக் கொண்டு உள்ளே வரும் பொழுது எந்தத் திசையை நோக்கி உள்ளே வருகிறாளோ அத்திசையைப் பார்த்தவாரே முதல் சடங்கு செய்து கொள்ள வேண்டும். அப்போது திருப்பூட்டுச் சடங்கில் செய்த மாதிரி யாவற்றையும் செய்யவேண்டும். அது முடிந்ததும் மற்ற மூன்று திசைகளிலும் சடங்கு செய்து கொள்ளச் சொல்ல வேண்டும். முதல் சடங்கைத் தவிர அடுத்து, அடுத்து உள்ள சடங்குகள், சிலேட்டு விளக்கை இடது கையிலும், கெண்டிச் செம்பை வலது கையிலும் வைத்துச் செய்து கொண்டால் போதும். எல்லாச் சடங்கிலும் பெண் கையில் 2 வெற்றிலை இருக்கவேண்டும். நான்கு திசையிலும் சடங்கு செய்து வந்தால் ஒரு சுற்று முடிந்துவிடும். பின்னர் இரண்டாவது சுற்றை சும்மா வரவேண்டும். மூன்று சுற்றுக்கும் இரண்டு மாமக்காரர்களும் உடன் நிற்கவேண்டும். மூன்றாவது சுற்று வரும்போது, ஒன்றன் பின் ஒன்றாக மணமக்கள் இருவரும் இணைந்து நின்று தவலைகளுக்குள் கையைவிட்டுப் பார்த்து, குலம் வாழும் பிள்ளையை மாப்பிள்ளை எடுத்துப் பெண்ணின் கையில் கொடுத்து விட்டு, எழுத்தாணியைத் தன் கையில் வைத்துக் கொள்ளவேண்டும். அந்தக் குலம் வாழும் பிள்ளையைப் பெண் பத்திரமாக இடுப்பில் சொருகிக் கொண்டு நடு வீட்டில் போய் இருவரும் உட்கார்ந்து வெளியே வரவேண்டும்.

மாப்பிள்ளை பெண் பால், பழம் சாப்பிடுவது:

பெண் அழைத்து முடிந்தவுடன், வளவில் உள்ள மற்றவர்கள் பால் பழம் தருவார்கள். அத்துடன் பாக்கு பணம் ரூ.1 அல்லது 2 வைப்பார்கள். அதை முதலில் மாப்பிள்ளை சாப்பிட்டு விட்டுப் பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பெண் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெண் வீட்டார் எடுக்கும் பச்சரிசி வேவு:

மாப்பிள்ளை பெண், பால், பழம் சாப்பிட்டதும் மாப்பிள்ளை வீட்டில், பெண் வீட்டார் எடுக்கவேண்டிய வேவு இது. வேவுக் கடகத்தில் பச்சரிசி பெரியபடி 1, தேங்காய் 2, கத்திரிக்காய் 2, போட்டு இருக்கவேண்டும். பெண் வீட்டைச் சேர்ந்த ஆண்கள் தலையில் இந்த வேவை வைத்து, மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த பெண்கள் இறக்குதல் வேண்டும். குறிப்பாக பெண்ணின் தகப்பனார் தலையில் இருந்து பெண் வேவு இறக்கவேண்டும்.

மாப்பிள்ளை வீட்டார் எடுக்கும் நெல் வேவு:

வேவுக் கடகத்தில் நெல் பெரியபடி 1, தேங்காய் 2, கத்திரிக்காய் 2 வைத்து மாப்பிள்ளையின் தகப்பனார் தலைப்பாகை கட்டி நெல் கடகத்தைத் தலையில் வைத்திருக்கவேண்டும். இந்த வேவைப் பெண் வந்து இறக்குதல் வேண்டும்.

ஸ்ரீ தன உண்டியல்:

ஸ்ரீ தனம், தலைச் சீலையில் முடிந்தது, பாக்குச் சுருளில் வைத்தது, ஈடு பொன் தந்தது ஆகிய நான்கு தொகைகளையும் குறிப்பிட்டு உண்டியல் எழுதி உடனே செல் வைத்து அந்த உண்டியலையும் அதற்குண்டான ரொக்கம் அல்லது டிராப்டையும் ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம் பழம், புஷ்பம் வைத்து மணமக்களின் தந்தையார், பெரியவர்கள், மாமக்காரர் முதலியவர்களிடம் மாப்பிள்ளை கொடுத்து வணங்கிப் பெற்றுக் கொண்டு, முடிவில் ஒரு சிறு பையனும் மாப்பிள்ளையுமாகச் சேர்ந்து அத்தாம்பாளத்தை நடு வீட்டிற்குள் கொண்டு போய் வைத்து எடுத்து வரவேண்டும்.
பின்னர் பெண் வீட்டார் பாக்கு வெற்றிலை வாங்கி சொல்லிக் கொண்டு புறப்பட வேண்டியது.

சீர்முறைக் கணக்கு பார்த்து கொள்ளுதல்:

நாளது தேதியில் திருமணத்தின் போது
ஸ்ரீதனமாகக் கொடுத்தது
ரூ.
தலைச் சீலையில் முடிந்தது
ரூ.
ஈடுபொன் வாங்கியது
ரூ.
(குறிப்பு: ஈடு பொன்தொகை மாப்பிள்ளை வீட்டார் கொடுத்து ஸ்ரீதனத்துடன் அதை சேர்த்துக் கொள்ளவேண்டும் இக்காலத்தில் உண்டியல் எழுதி செல் வைக்காமல் மேலே கண்டுள்ளபடி எழுதிக்கொள்கின்றனர்.)

நீர்ச்சோறு இடுவது:

திருமணம் முடிந்த அன்று இரவோ அல்லது மறு நாளிலோ, பெண் வீட்டார், மாப்பிள்ளை பெண்ணைக் கூட்டிக் கொண்டு சென்று மாப்பிள்ளைக்கு கஞ்சி, பணியாரம், வள்ளிக்கிழங்கு பொரித்து உள் வீட்டில் இலை போட்டு பெண் பரிமாறி தயிர் ஊற்ற வேண்டியது. அப்போதே நடு வீட்டினுள் பெண்ணை உட்கார வைத்துப் பெண்ணின் அத்தை, பெண்ணின் கழுத்தில் தும்பைக் கட்டி விட வேண்டியது. அத்தை அல்லது அத்தை மகள் அல்லது அப்பச்சி, பெரியப்பச்சி வகையறாவும் தும்பைக் கட்டலாம்.

மூன்று வேவு அல்லது வழிகள்:

திருமணம் முடிந்தவுடன் மூன்று முறை பெண் வீட்டார், மாப்பிள்ளை பெண்ணைத் தன் வீட்டிற்குக் கூட்டி வரவேணும். அதில் நீர்ச் சோறு இடுவது முதல் வழியாகவும் மற்ற இரண்டு வழிகளுக்கும் ஒரே தடவையில் வந்து வரலாம். இந்த முறையுடன் திருமண முறைகள் யாவும் பூர்த்தியடைகிறது. செட்டி நாட்டுக் கல்யாணம் சீரும் சிறப்புடன் நிறைவேறுகிறது.

காய்ச்சி ஊற்றிக் கொள்ளுதல்:

ஒரு குடும்பத்தில் சிறப்பான நிகழ்ச்சி ஒன்று நிறைவு பெற்றதை முன்னிட்டு இரு குடும்பத்தாரையும் பாராட்டி, அவர்களுடைய உறவினர்கள் (தாய்வழி மாமன்) கொடுக்கின்ற விருந்து இது. புது மணமக்கள் தாய்மாமன் வீடுகளுக்குச் சென்று காய்ச்சி ஊற்றிக் கொள்ளுதல் என்பது தொன்றுதொட்டு நிலவி வருகிறது.

கழுத்துரு கோர்த்தல்:

கழுத்துரு கோர்ப்பதற்கு 10 நிர் வெள்ளை நூல் கண்டு வாங்க வேண்டும். இரு பெரியவர்கள் அந்த நூலில் 21 பாகம் (9 1/2 மீட்டர்) எடுத்து (ஒரு பாகம் = 45 cm) அதை முப்பிரியாக வரும்படி ஒரு மடிப்புக்குள் இன்னொரு மடிப்பை பின்னலாகக் கொடுத்து வாங்கி, சங்கிலிப்பின்னல் போல பின்னி நன்றாக இறுக்கமாகத் திரித்துக் கொண்டு பட்டணம் மஞ்சளை நீரில் நனைத்துக் கொண்டு அந்த நூலில் நன்றாக தேய்த்து மஞ்சள் நன்றாக ஏறும்படி செய்து முறுக்கு விடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படிக் கிடைப்பது 7 பாகமாக இருக்கும். அதை இரண்டாக மடித்துக் கழுத்துருவில் 31 (சில ஊர்களில் 29) உருப்படிகளையும் கீழ் கண்ட படத்தில் உள்ளபடி கோர்க்கவேண்டும்.
மேல்பாகம், கீழ்பாகம் இரண்டிலும் கோர்த்தபின் இரண்டையும் இரு முனைகளிலும் தனித்தனியே உருவிவராத நிலையில் நன்றாக முடிச்சு போடவேண்டும்.

பிள்ளைச் சரடு இழைதல்:

7 பாகம் நூல் எடுத்து, 3ல் ஒரு பங்காக சங்கிலிப் பின்னல் பின்னி மஞ்சள் ஏற்றி, அதில் ஒத்தை தும்பை கோர்க்கவேண்டும். ஒரு நல்ல நாள் பார்த்து பெண்ணின் தாயார் வீடு சென்று கழுத்துருவின் இடது பக்கத்தில் இரண்டு கயிற்றிலும் சேர்த்து குச்சி, தும்பு துவாளையைக் கட்டி பின்னர் கழுத் துருவை கழுத்தில் அணிந்து கொண்டு சாமி கும்பிட்டு பின்னர் கழட்டி வைக்கவேண்டும்.

கழுத்துரு:








கழுத்துரு உருப்படிகள்:

மேல் பாகம்:
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16
கீழ்பாகம்:
17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31
கடைமணி:
1, 16, 17, 31
உரு:
2, 3, 4, 6, 8, 10, 12, 14, 15, 18, 19, 20, 22, 23, 25, 26, 28, 29, 30
ஏத்தனம்:
5, 13, 21, 27
லெட்சுமி ஏத்தனம்:
24
சரி மணி:
7, 11
திருமாங்கல்யம்:
9
29 உருப்படிகள் இருந்தால் 23, 25 (வட்டத்துக்குள் உள்ளதை) கோர்க்க வேண்டாம்.

சங்கிலிப்பின்னல்:





AUTHOUR
ARUNKHANNEN,
CHETTINATTU HERITAGE.